பின்பற்றுபவர்கள்

30 மே, 2012

கலவை 30/மே/2012 !

சிங்கப்பூர் அருகே இருக்கும் மலேசிய ஜோகூர் பாருவில் கண்ணாடி கோவில் என்று ஒரு தனியார் (இராஜ காளியம்மன்) கோவில் உள்ளது, முழுக்க முழுக்க கண்ணாடி வேலைப்பாடுகளால் ஆனது. சாலைக்கு தள்ளி 100 மீ தொலைவில் அமைந்திருக்கும் கோவிலை தொலைவில் இருந்து பலமுறை பார்த்திருக்கிறேன், இரண்டு வாரத்திற்கு முன் நண்பர்கள் இருவரின் விருப்பத்தினால் உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பல்வேறு வண்ணக் கண்ணாடித் துண்டுகளால் ஆன வண்ண வேலைப்பாடுகளால் இழைத்து வைத்திருக்கிறார்கள் கோவிலை. ஜோகூர் பாரு பகுதியின் அறிவிக்கப்படாத சிறிய சுற்றுலாத் தளம் போல் நிறைய பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர், அவர்களில் வெளி நாட்டினருக்கு 10 ரிங்கிட் நுழைவு கட்டணம் பெறப்படுகிறது. ஒரு மலேசிய இளம் சாமியார் அந்தக் கோவிலை உருவாக்கி அங்கு ஒரு ஆன்மிகக் குழுவை உருவாக்கி அந்த கோவிலில் அவர்களது ஆன்மிகம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்துகிறார். பக்தர்கள் அனைவரும் செவ்வாடை அணிந்திருந்தனர், ஆனால் மருவத்தூர் குரூப் கிடையாது. கோவிலுனுள் ஏசு, புத்தர், சாய்பாபக்கள் உள்ளிட்டோரின் வெள்ளை பலிங்கில் செய்த உருவச் சிலைகள் உள்புறச் சுற்றில் இருந்தன. ஜோகூர் செல்பவர்கள் ஒருமுறை சென்று பார்க்கலாம், அருகே இரயில் தண்டவாளம் கூட உண்டு.








*****

இரண்டு வாரத்திற்கு முன்பு சிங்கப்பூர் இலக்கிய வட்டம் சார்ப்பில் பட்டிமன்றம் நடந்தது, கண்ணகி மாதவி கற்பு பற்றிப் பேசாமல் கர்ணன் - கும்பகர்ணன் இவர்களில் தியாகி யார் என்று பேசிக் கொண்டு இருந்தனர். மகாபாரதம் முழுவதும் வந்து போகும் ஒரு பாத்திரத்தையும், இராமயணத்தின் இறுதியில் வரும் ஒரு பாத்திரத்தையும் ஒப்பிடுவதில் இருவருக்குமான ஒப்பிடத் தக்கப் போதிய தகவல் இல்லை என்பதால் கர்ணன் ஆதரவு மற்றும் கும்பகர்ணன் ஆதரவு இருவருமே கர்ணன் பற்றிய ஆதரவு எதிர்ப்பு விமர்சனங்களாகச் செய்து கொண்டு இருந்தனர். கடைசியாக தீர்ப்பை கர்ணனுக்கு ஆதரவாகச் சொல்லிவிட்டனர். கர்ணன் படம் மறு வெளியீடு செய்ததன் பலனோ. தலைப்புகளும் ஒப்பீடும் அபத்தமாக இருந்தாலும் பேச்சுகள் போரடிக்கவில்லை. என்னைக் கேடால் முதல்வர்களில் மோசமானவர் கருணாநிதியா, ஜெ-வா என்று பட்டிமன்றம் வைத்தால் பேச நிறைய தகவல்கள் இருக்கும்.

*****

இதுவும் இரண்டுவாரம் முந்தைய தகவல் தான், 2 வாரம் முன்பு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மோசமான சாலை விபத்து. 1.4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி விலை உள்ள பெர்ராரி காரை மிக வேகமாக ஓட்டிவந்த ஒருவர் போக்குவரத்து விளக்கை மதிக்காமல் ஒரு வாடகைக் காரில் பலமாக மோத, பெராரி சொந்தக்காரர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போனார், வாடகை கார் ஓட்டுனர் வயது 52 மறுநாள் மருத்துவமனையில் இறந்து போனார், வாடகைக் காரில் பயணம் செய்த தற்காலிகமாக சிங்கப்பூரில் இருந்த ஜப்பானிய இளம் பெண் வயது 20 விபத்து நடந்த அரைமணி நேரத்தில் மாண்டு போனார், அந்த மோசமான விபத்தில் அந்த அதிகாலை நேரத்தைப் பயன்படுத்தி விபத்தில் சிக்கிய பெண்ணின் முனகளைப் பொருட்படுத்தாமல், அங்கேயே அவளது பொருள்களை ஒரு ஆடவர் திருடிச் சென்றாராம். சிங்கப்பூரில் கடந்தவாரம் முழுவதும் அந்த விபத்து பற்றி தான் எங்கும் பேச்சு. 1.4 மில்லியன் என்பது இந்திய ரூபாய் மதிப்புக்கு 5.88 கோடி. ஒரு நொடில் அவ்வளவு பணமும், மூன்று உயிர்களும் பாதிப்புக்கு உள்ளனது, விபத்தை நடத்தியவர் சீனாவில் இருந்த் 2 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்த ஒரு பணக்கார இளைஞன் (32 வயது) அவனுக்கு ஒரு 8 மாத கர்ப்பத்துடன் ஒரு மனைவியும், ஒரு 4 வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்த விபத்து குடியினால் ஏற்பட்ட விபத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெராரி ஓட்டுனர் குடிந்திருந்தாராம்.


ஒரு நொடி விபத்தில் எப்படியெல்லாம் வாழ்கையே பறிபோகிறது என்பதைக் காட்டும் வீடியோ.

*****
நீயா நானா கோபிநாத் - பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் பற்றி முகநூல் மற்றும் சமூக இணையத் தளங்களில் சர்ச்சைகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன, அந்த நிகழ்சியை நானும் பார்த்தேன், பவர் ஸ்டார் போலி கவுரவம் தெரிந்தது தான், நிகழ்ச்சியின் தலைப்பும் பேசு பொருளும் தெரிந்து தான் அந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டு வந்திருந்தார். தான் அவமானப்படுத்தப் படுவோம் என்று கூட அவர் அறிந்திருக்கக் கூடும், கோபிநாத்தின் பேச்சுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. போலி கவுரவம் பற்றி பேசும் கோபிநாத் நடிகர் விஜயையும் அவருடைய அப்பாவையும் சிறப்பு விருந்தினராகக் கூட்டி வந்து அவர்களது கடந்த கால போலி கவுரவங்களையும் 'இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு இருப்பவர் உங்கள் விஜய்' பற்றிக் கேள்வி கேட்க முடியுமா ? 100 கோடி செலவில் கட்டப்பட்ட சட்டமன்ற வளாகத்தைப் புறக்கணித்த ஜெவின் போலி கவுரவம் பற்றி கோபிநாத்தினால் கேள்வி எழுப்ப முடியுமா ? முற்றிலும் தமிழில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு கோட் சூட் போட்டு நடத்திவரும் கோபிநாத்தின் கவுரவம் எத்தகையது ? அவரது உடைக்காகத்தான் நிகழ்ச்சி பேசப்படுகிறதா ? வேறொரு நிகழ்ச்சியில் பட்டிமன்றம் என்பது காலவதியான விவாத முறை என்றெல்லாம் கூட இவர் ஒருமுறை திருவாய் மலர்ந்திருந்தார், இவர் நடத்தும் நிகழ்ச்சி ரசிக்கப்படுகிறது என்பதற்காக பாரம்பரியமாக நடத்தி வரும் நிகழ்ச்சியை பற்றி காலவதியானவை, பழமையானவை என்று இவர் எந்த அடிப்படையில் பேசுகிறார் என்றே தெரியவில்லை, இன்றைக்கும் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்திற்கென்றே பெரும் ரசிகர் கூட்டமே இருக்கின்றது. வளரும் நிலையில் கோபிநாத்தின் தான் தோன்றித்தனமான கருத்துகள் அவரின் வளர்ச்சிக்கு பின்னடைவே. கோபிநாத்தின் அத்தனை அவமானகரமான கேள்விகளுக்கும் கோபப்படாத பவர் ஸ்டார் இன்னும் 30 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவில் நுழைந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது.

*****

இப்பெல்லாம் எங்க பையன் செங்கதிர் அடம் பிடிப்பதை நிறுத்த ஐபோன் கை கொடுக்கிறது ஆனாலும் அவன் மிகுதியாக அடம்பிடிப்பதற்கும் அதுவே காரணமாகவும் அமைந்துவிடுகிறது, ஒரு 20 நிமிடம் கையில் கொடுப்போம். தொடு திரையை நன்றாக கையாளுகிறான், பிடிக்காதவற்றை (பெரும்பாலும் ஐபோன் விளையாட்டுகளை) உடனேயே மூடிவிட்டு வேறொன்றை அழுத்தி எடுத்துக் கொள்கிறான், சிறிய குழந்தைகளும் பயன்படுத்தும் படி ஐபோன் அமைந்திருப்பது தான் அதன் வெற்றி என்றே நினைக்கிறேன், டாக்கிங் கலெக்சன் எனப்படும் பேசும் விலங்குகள், பறவைகள் ஆகிய விளையாட்டுகளை விரும்பி அதனுடன் பேசுகிறான். கண்ணுக்கு பிரச்சனை ஆகிவிடக் கூடாது என்பதற்காக கொஞ்ச நேரத்தில் அவன் கையில் இருந்து பறித்து கையை வேகமாகச் சுழற்றி 'காக்காய் தூக்கிப் போய்விட்டது' என்று மறைத்துத்தான் பிடுங்க முடியும், அவ்வாறு செய்வதை கவனித்து வந்து ஐபோனுக்கு பெயர் 'காக்கா' என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான், எப்போதெல்லாம் போன் வேண்டுமோ அப்போது 'அப்பா காக்கா' என்று கேட்கிறான். செம அக்குறும்பாக இருக்கிறது. வேலைக்கு பிறகு மற்றும் வார இறுதிகளில் குழந்தையுடன் நல்ல பொழுது போக்கு.



9 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

பவரைப் பற்றியே தமிழ்மணத்தில் நிறைய வந்ததால்...... யார் இந்த பவர் என்று நீயா நானா இப்போதுதான் பார்த்தேன்.

பவர் ஏன் வேரு முகத்தை காட்டணும் என்று கோபிநாத் பிடிவாதம் பிடிக்கிறார்.

உலகுக்கு எந்த முகம் காமிக்கணும் என்பது தனி மனித சுதந்திரம் இல்லையோ?

கண்ணாடிக் கோவில்களை வட இந்தியப் பயணத்தில் நிறைய இடத்தில் பார்த்தேன்.

செங்கதிர் நல்ல வளர்ச்சி தெரிகிறது.

இப்போதையக் குழந்தைகள் படு ஸ்மார்ட்.

ரசித்தேன். இனிய வாழ்த்து(க்)கள்.

Rizi சொன்னது…

இது நல்லாயிருக்கே..:))

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ
கலவை வழக்கம் போல் அருமை
நன்றி!

? சொன்னது…

கலவை சுவை.

ஆனாலும் ஒரு சந்தேகம். 'ஒண்ணுக்கு வருது டீச்சர்' என்பது போல கையை காட்டுபவர் யார் புத்தரா?

வேகநரி சொன்னது…

பவர் ஸ்டார் மீது தனி மதிப்பும், கோபிநாத்தின் மீது வெறுப்பும் எற்பட்டது.

suvanappiriyan சொன்னது…

//சிங்கப்பூர் அருகே இருக்கும் மலேசிய ஜோகூர் பாருவில் கண்ணாடி கோவில் என்று ஒரு தனியார் (இராஜ காளியம்மன்) கோவில் உள்ளது, முழுக்க முழுக்க கண்ணாடி வேலைப்பாடுகளால் ஆனது.//

ஜோகூர் பாரு பெயரைக் கேட்டவுடன் எனது தாத்தா ஞாபகம் வந்தது. அவர் முன்பு தொழில் செய்த இடம். இன்றும் கூட அந்த சம்பவங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பார்.

ஜோதிஜி சொன்னது…

ஆனாலும் ஒரு சந்தேகம். 'ஒண்ணுக்கு வருது டீச்சர்' என்பது போல கையை காட்டுபவர் யார் புத்தரா?


டக்கென்று சிரிப்பை வரவழைத்து.

ஐ போன் தான் விளையாட்டு கருவியா? இங்கே பரவாயில்லை போலிருக்கு

கிரி சொன்னது…

கோவிகண்ணன் இதற்கு பிறகு ஒரு விபத்து நடந்தது ஆனால் நல்லவேளை ஒன்றும் ஆகலை.

பவர் ஸ்டார் இந்த நிழச்சிக்கு பிறகு பவர் புல் ஸ்டார் ஆகிட்டார் ;-)

இன்னும் கொஞ்சம் பெரிய பையன் ஆனால் செங்கதிருக்கு iPhone கட்டாயம் வாங்கியே ஆகணும் போல இருக்கு ;-)

துளசி கோபால் சொன்னது…

ஜோதிஜி,

புத்தர் சிலையாவது சின்னக்குழந்தை....

தமிழ்நாட்டுலே நாற்சந்தி முச்சந்திகளில் கடக்கும்போது கொஞ்சம் கண்ணை உயர்த்திப்பாருங்க.

பெரியவங்களும் ஒன்னு ரெண்டு ன்னு கை விரலைக் காமிச்சுக்கிட்டு நிப்பாங்க:-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்